மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 9 February 2019

விவேகானந்தரை போட்டிக்கு அழைத்த இளைஞர்கள்...


           சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்ற வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்படியாக ஒருமுறை அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும், பாலமும் இருந்தன.


       ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு சில இளைஞர்கள், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள்.

          அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன.

         இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை.

       இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

        அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்! அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான்.

           சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியை கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளை குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்து கொண்டிருந்தன.

         விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாக சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்து சிதறின. இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள்.

            அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கி சுடுவதில் ஏற்கனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று கேட்டனர். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன்முறையாக துப்பாக்கியை தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.

          அவர்கள், அப்படியானால் ஒரு குறிகூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. 'மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் எந்த செயலும் வெற்றியைத் தரும்" என்று பதிலளித்தார்.

       'எல்லா ஆற்றலும் உன்னில் உள்ளது. உங்களால் எதையும் மற்றும் எல்லாவற்றையும் செய்ய முடியும். அதை நம்புங்கள், நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்று நம்பாதீர்கள்" என்று இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார் சுவாமி விவேகானந்தர்.

            அதேவேளையில், 'வெற்றிகளைச் சந்தித்தவன் இதயம், பூவைப்போல் மென்மையானது, தோல்விகளை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பைவிட வலிமையானது" என்று சொல்லி அவர்களின் மனதை திடப்படுத்தினார்.

Pages