மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 10 February 2019

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி !! 


             ஒருசமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்கு சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

             ஒருநாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தை பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

              அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் பயந்துவிட்டனர். மனைவியை தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

          பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரை துரத்தியது. அதைக் கண்ட நண்பர், உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டை பிடித்து கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

        அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். 'சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?" என்று கேட்டார் நண்பர்.

            அதைக் கேட்டு மெல்ல புன்னகைத்த விவேகானந்தர், 'நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மனஉறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரை கண்டால் துரத்தி செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது" என்று முடித்தார்.

        உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக்கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மனஉறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரை பார்த்து பெரிதும் வியந்தார் நண்பர்.

Pages