மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 23 April 2019

நா நெகிழ் சொற்றொடர்கள்


   'இங்கு அங்கு எங்கு போனால் நுங்கு தின்னலாம்?' இப்படி ஒரே ஓசையைக் கொண்ட சொற்களை மேலும் மேலும் இணைத்து சொற்றொடர் ஆக்குவதை 'நா நெகிழ் சொற்றொடர்கள்
' எனலாம். ஆங்கிலத்தில் இதனை டங் ட்விஸ்டர் (Toungue Twister) என்பர். தமிழ் எழுத்துகளிலுள்ள வேறுபாடுகளை உணர்ந்து, உச்சரிப்பதற்கு சிறந்த பயிற்சி இது. 

     கீழே சில 'நா புரட்டுகள்' உள்ளன. உங்கள் நாவைப் புரள விட்டு சத்தமாக இவற்றைப் படித்து மகிழுங்கள்.

1. கும்பகோணக் குளக்கரையில் குந்தியிருந்த குரங்கை குப்பன் குச்சியால் குத்தியதால் குரங்கு குளத்தில் குதித்தது.

2. கார் சீற நீர் சீறும்; ஏர் கீற வேர் கீறும்.

3. புட்டும் புதுப் புட்டு தட்டும் புதுத் தட்டு புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா.

4. ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்.

    'தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதிதுத்தித் துதைதி துதைதத்தா தூதுதிதித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது?'பாடலில் என்ன சொல்ல வருகிறார் காளமேகப் புலவர்?

தத்தித் தாதூ துதி - தத்திச் சென்று பூக்களில் உள்ள மகரந்தத்தை ஊதிக் குடிக்கிறாய்...

தாது ஊதித் தத்துதி- குடித்தபின் மீண்டும் நீ சென்று விடுகிறாய் ..

துத்தித் துதைதி - 'துத்தி' என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிச் சென்று விடுகிறாய்..

துதைதத்தா தூதுதி - அடுத்த பூவுக்குச் சென்று அந்தப் பூவின் மகரந்தத்தையும் உண்கிறாய்..

தித்தித்த தித்தித்த தாதெது? - மிக மிக இனிப்பான தேன் எது?

தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? -- நீ இதுவரை குடித்த பூக்களின் மகரந்தங்களில் மிகவும் இனிப்பான தேன் எது?

'வண்டே, நீ பல பூக்களைத் தேடிச் சென்று தேனை உண்கிறாய். அப்படி நீ உண்ட தேனில், மிகவும் இனிப்பான பூவின் தேன் எது?' 

இந்தக் கேள்வியைத்தான் காளமேகப் புலவர் வண்டிடம் கேட்கிறார்

Pages