ஆப்ரகாம் லிங்கன் வழக்கறிஞராய் இருந்த சமயத்தில் ஒருநாள் ரயில் நிலையம் செல்லும் வீதிவழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் மிகவும் படபடப்புடன் காணப்பட்டார். அவருக்கு அருகில் பெட்டி ஒன்றும் இருந்தது. அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்ட ஆப்ரகாம் லிங்கன், அவரிடம் சென்று 'என்னம்மா ஆயிற்று? யாரையோ எதிர்பார்ப்பதைப்போலக் காணப்படுகிறீர்களே, என்னவாயிற்றுச் சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்" என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், 'ரயிலுக்கு அவசரமாக செல்ல வேண்டும்;. இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்த நபரை இன்னும் காணவில்லை. அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறேன்" என்று சற்று கவலையுடன் கூறினார்.
அதற்கு ஆப்ரகாம் லிங்கன், இவ்வளவுதானே... இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்? நானும் ரயில் நிலையத்திற்குதான் செல்கிறேன். நான் இதை கொண்டுவருகிறேன். என்னோடு வாருங்கள்... என்று சொல்லி அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தார்.
அவர்கள் இருவரும் செல்வதற்கும், ரயில் புறப்படுவதற்கும் சரியாக இருந்தது. ரயிலைப் பிடித்த சந்தோஷத்தில் அந்தப் பெண் ஆப்ரகாம் லிங்கனுக்கு நன்றி தெரிவித்தார்.
இப்படி, பெரிய பொறுப்பிலும், பதவியிலும் அவர் இருந்தபோதும்கூட யாராவது உதவி என்று கேட்டுவிட்டால் போதும். அதையெல்லாம் மறந்துவிட்டு அவர்களுக்கு உதவிசெய்ய ஆரம்பித்துவிடுவார்.