மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 9 August 2021

புரியாத புதிர்... லாவோஸ் ஜாடிகள்!

வாரம் ஒருமுறை ஏற்படும் விபத்து... புரியாத புதிர்... லாவோஸ் ஜாடிகள்!


          லாவோஸ் நாட்டில் ஜிங் குவாங் என்ற சமவெளி உள்ளது. இது ஜார்ஸ் சமவெளி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் விசித்திரமான, தொன்மையான ஜாடிகள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. இந்த ஜாடிகளில் பெரும்பாலானவை மணற்கற்கள், சுண்ணாம்புகற்கள், கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



          இந்த ஜாடிகள் இரும்பு உளிகளை கொண்டு கற்களை குடைந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இவ்வளவு ஜாடிகளையும் எந்த நாகரீகத்தை சார்ந்த மனிதர்கள் கட்டியிருக்கிறார்கள், எந்த நோக்கத்திற்காக உருவாக்கி இருக்கிறார்கள் என்பது தொல்லியலாளர்களுக்கு இன்றும் புரியாத புதிராகவே உள்ளது.


        இந்த ஜாடிகள் ஒவ்வொன்றும் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரமும், 13 டன்கள் வரை எடையும் கொண்டவை. இந்த ஜாடிகளின் உண்மையான பயன்பாடு என்னவென்று தெரியவில்லை. இறந்தவர்களை புதைப்பதற்கு இவை பயன்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


          இது குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன. ஜார்ஸ் சமவெளியில் 400க்கும் மேற்பட்ட இடத்தில் இந்த ஜாடிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. போன்சவான் என்ற நகருக்கு அருகே 250க்கும் மேற்பட்ட ஜாடிகள் ஒரே இடத்தில் இருப்பது, இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது.



மிகவும் ஆபத்தான பகுதி :
       ஜாடிகள் புதையுண்ட இடங்களில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள முடியாமல் போனதற்கு ஒரு ஆபத்தான காரணம் கூறப்படுகிறது. 1960 முதல் 1970 வரையிலான காலத்தில், வியட்நாம் நாட்டின் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது, லாவோஸ் நாட்டின் மீதும் அதிகளவில் குண்டுகள் விழுந்தன. இந்த குண்டுகள் தாக்கி, வரலாற்று பெருமை கொண்ட ஏராளமான ஜாடிகள் சேதமடைந்தன.


         ஜார்ஸ் சமவெளியில் வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காமல் பூமியில் புதையுண்டன. மேலும், 2 லட்சத்து 50 ஆயிரம் கண்ணி வெடிகள் பூமியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியில் புதையுண்டுள்ள குண்டுகளில் 30 சதவீதம் இன்னும் தோண்டி எடுக்கப்படவில்லை.


         இவற்றால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் என்ற பதற்றமான சூழ்நிலை அங்கு நிலவுகிறது. வாரத்திற்கு ஒரு விபத்தாவது இப்பகுதியில் ஏற்படுகிறது. ஜார்ஸ் சமவெளி ஆபத்தான பகுதி என்று தெரிந்தப்போதிலும், தொன்மையான ஜாடிகளை பார்ப்பதற்காகவே இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிகின்றனர்.

Pages