மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 13 September 2021

தங்கத்தையே எடைபோட உதவிய விதை எது தெரியுமா?


     ஆனை குன்றிமணி மரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதன் தாவரவியல் பெயர் அப்ரஸ் பிரிகட்டாரியஸ் என்பதாகும். அடிநாந்திரா பவோனினா குடும்பத்தைச் சேர்ந்தது. அடிநாந்திரா என்றால் மகரந்தத் தண்டிலுள்ள சுரப்பியைக் குறிக்கும், பவோனினா என்றால் இலத்தீன் மொழியில் மயில் இறகைப் போன்றது என்று பொருள். இந்த மரம் 18 மீட்டர் உயரம் வரை வளரும். கிளைகள் 10 மீட்டர் அளவில் பரவியிருக்கும்.  இலைகள் இரட்டைக் கூட்டிலை அமைப்பைக் கொண்டது. குப்பையில் எறிந்தாலும் குன்றிமணி சுருங்காது என்ற பழமொழி இம்மரத்தின் பெருமையைக் குறிக்கிறது. அக்கால மக்கள் மணிச்சிகை , பவளக்குன்றி என்றும் சொல்வார்கள். இதன் காய்கள் முற்றி , கீழே இந்து வெடித்தால் , மரத்தின் அடியில் விதைகள் நிறைந்து காணப்படும்.


     அக்கால மக்கள் தங்கம் , வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களை எடைப் போட, குன்றிமணியைத் தான் பயன்படுத்தினார்களாம். உங்களுக்குத் தெரியுமா, இரண்டு குன்றிமணிகள் என்பது தற்காலத்தில் உள்ள ஒரு கிராம் அளவாகும். அக்கால மக்கள் வீடுகளிலும், மர நிழல்களிலும் அமர்ந்து விளையாடும் பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளில் குன்றிமணிகளைப் பயன்படுத்தி விளையாடினார்கள். இப்போ  குன்றிமணி எப்படி இருக்கும் என கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.


     அக்காலத்தில் பெண்கள் அணியும் கழுத்து அணிகலன்களில் குன்றிமணி கட்டாயம் இடம் பிடித்து அழகுக்கு அழகூட்டும். குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் மற்றும் தெய்வ வடிவங்களின் கண்களுக்கு குன்றிமணி விதைகளையே பயன்படுத்துவார்கள். விநாயகர் சதுர்த்தித் திருநாளின் போது, எல்லோர் வீட்டிலும் எழுந்தருளும் களிமண் பிள்ளையாரின் கண்களாக  குன்றிமணிகள் தான் அருள் ஒளி வீசும். இம்மரத்தின் இலைகள், பட்டைகள், விதைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. சித்தர்கள் உரைத்த அஷ்ட கர்ம மூலிகைகளில் குன்றிமணியும் உண்டு.


      திருக்குறளில் காணப்படும் ஒரே விதை குன்றி மணிதான். 

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ 
குன்றி அனைய செயின் 

    அதாவது, மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமானச் செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர் என்பது இதன் பொருளாகும்.


      இதன் இலையை நன்கு மசிய அரைத்து கை, கால்களில் தேய்த்து வந்தால் வாத நோய் வரவே வராது. அதையே கஷாயமாக்கி குடித்தால், சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது சட்டென நின்று விடும், உடல்வலி தீரும், சளி, இருமல் தொல்லைகள், வயிற்றில் புண்ணால் ஏற்படும் வலியும் ஓடி விடும்.  இளம் தளிர்களை கீரையாகவும் சமைத்து உண்ணலாம். இதனால் செரிமான பாதிப்புகள் விலகுவதுடன், உடலுக்கு நல்ல சத்துகளுடன், வயிறும் நலம் பெறும். குன்றிமணி விதையை நன்கு அரைத்து கட்டி, புண்கள் மீது தடவினால் வீக்கம் குறைந்து இருந்த இடம் தெரியாது, புண்கள் சீழ் பிடிக்காது. மரப்பட்டைத் தூளை நீரில் சுண்டக் காய்ச்சி பருகினால் வயிற்று வயிற்றுப் போக்கு மறைந்து விடும் .


       வேர்களை நீரிலிட்டு சுண்டக் காய்ச்சி பருகி வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல், வெண் குஷ்டம், சொரி, சிரங்கு வரவே வராது. குன்றிமணி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை சமைக்கவும் பயன்படுத்தினால், உங்கள் செரிமானத்தைத் தூண்டி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை வெளியேற்றி விடும். உங்கள் தலைமுடி உதிர்கிறதா? குன்றிமணி, வெந்தயம் இவற்றை தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து பின் தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிரும் பிரச்னை உங்களுக்கு இருக்கவே இருக்காது .


     பூச்சிகள் அரிக்காத உறுதியான மரம் என்பதால், மேஜைகள், நாற்காலிகள், அலங்காரப் பொருள்கள், வீடுகளில் உள் அலங்கார வேலைகள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.

      இவ்வளவு சிறப்பு வாய்ந்த குன்றிமணி மரம் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. மரங்கள் மனிதனுக்குப் பல நன்மைகளை செய்கிறது. ஆனால் நாம் அதன் அருமை தெரெயாமல் அழிக்கிறோம். ஒவ்வொரு மரமும் நம் வாழ்வின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களு. மரங்களைப் போற்றி பாதுகாப்போம்.

Pages